மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு நூதன போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குஜராத் முதலமைச்சராக மோடி, கடந்த 2011 ஆம் ஆண்டு இருந்தபோது அம்மாநிலத்தின் ஆளுநராக கமலா பெனிவால் இருந்துள்ளார். இந்நிலையில் மாநில அரசின் உரிமைகளில் கவர்னர் தலையிடுவதாகவும், அவரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும், அப்போதைய முதல்வராக இருந்த மோடி, அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் அத்துடன், ஆளுநருக்கு எதிராக குஜராத் மாநிலத்தில் மாபெரும் கண்டன ஊர்வலத்தையும் அவர் மேற்கொண்டார்.
இதையடுத்து அந்தக் கடிதத்தை நினைவுப்படுத்தி, அதனை மோடிக்கே அனுப்பும் போராட்டத்தை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மேற்கொண்டுள்ளனர். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள தபால் நிலையத்தில் பிரதமர் அன்று எழுதிய அந்த கடிதத்தின் நகல்களை எடுத்து , அவருக்கே தபால் மூலம் அவர்கள் நேற்று அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், ‘குஜராத் முதல்வராக இருந்தபோது, மாநிலத்தின் உரிமையில் தலையிடுவதாக கூறி, ஆளுநரை திரும்ப பெற வேண்டுமென மோடி வலியுறுத்தி இருந்தார்.
ஆனால் தற்போது அவரே பிரதமரான பிறகு தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு, ராஜ்பவன் மூலம் கொள்ளை ஆட்சியை நடத்த முயற்சித்து வருகிறார். எனவே இது ஜனநாயக முறைக்கு எதிரானது எனவும் ஆகவே அன்றைக்கு முதல்வராக இருந்தபோது, அவர் எழுதியுள்ள கடிதத்தை நினைவுகூறும் வகையில், அந்த கடிதத்தை அவருக்கே அனுப்பியுள்ளோம். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு ஈஸ்வரன் கூறியுள்ளார்.