இயக்குனர் செல்வராகவன் புதிதாக ஒரு படத்தில் வில்லனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர்கள் பலர் நடிகர்களாகவும் அவதாரம் எடுத்து வரும் நிலையில் இயக்குனர் செல்வராகவனும் அந்த வரிசையில் இப்போது வர தொடங்கியுள்ளார். இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அருண் மாதேஸ்வரன். இவர் தற்போது செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். செல்வராகவன் முதன்முதலாக ஹீரோவாக நடிக்கும் இதன் படப்பிடிப்பு அண்மையில் முழுவதுமாக நிறைவடைந்தது விட்டது.
மேலும், செல்வராகவன் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மட்டுமல்லாமல் செல்வராகவன் தனுஷ் நடிப்பில் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட படங்களையும் இயக்க உள்ளார் . இந்நிலையில், தற்போது மேலும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க செல்வராகவன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள இந்தப்படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.