செப்டம்பர் 1 முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கான பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு ஒகேனக்கல்லில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், வாகனத்திற்கான ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் என்ற அடிப்படையில் காப்பீடு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஓட்டுனர் அல்லாத ஒருவர் இழப்பிற்கு ஒரு லட்ச ரூபாய் மட்டுமே இழப்பீடு வாங்க முடியும் என்று காப்பீடு நிறுவனம் தெரிவித்தது.
ஈரோடு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார். அதேசமயம் புதிய வாகனத்தை வாங்கும் போது அது எவ்வாறு செயல்படும் என்றும்,காப்பீடு முறைகளை முழுமையாக மக்கள் தெரிந்து கொள்ளவில்லை என்பது வேதனை தெரிவித்துள்ளார். எனவே வாகனம் வாங்குபவர்கள் காப்பீடு தொடர்பான விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இதையடுத்து செப்டம்பர் 1 முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காப்பீட்டு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக செப்டம்பர் 30ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.