சென்னை மீனம்பாக்கம் விமானம் நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க மற்றும் புறப்பட 2 ஓடுபாதைகள் இருக்கிறது. இதில் முதல் ஓடுபாதை 3.66 கி.மீ தூரமும், 2வது ஓடுபாதை 2.89 கி.மீ தூரமும் கொண்டது. முதல் ஓடுபாதையில் பெரியரக விமானங்கள் வந்து தரையிறங்கி, பிறகு புறப்பட்டு செல்கிறது. 2வது ஓடுபாதையில் சிறு ரக விமானங்கள் இயக்கப்படுகிறது. இதனிடையில் விமான நிலையத்தின் முதல் ஓடுபாதையானது பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பின் 2வது ஓடு பாதையை முழுமையாக பயன்படுத்த இயலவில்லை. இப்போது அவ்வப்போது முதல் ஓடுபாதையில் ஏதாவது பிரச்சினை மற்றும் பராமரிப்பு நடக்கும்போது 2-வது ஓடுபாதை பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்திலுள்ள 2 ஓடுபாதைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த சென்னை விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முதல் பிரதான ஓடுபாதையை புறப்பாட்டிற்காகவும், 2வது ஓடுபாதையை விமானங்கள் தரை இறங்குதல் மற்றும் சிறிய ரக விமானங்கள் புறப்பாடு என இரண்டிற்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்கென சென்னை விமானம் நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி முடிந்ததும் முதலாவதாக சோதனை அடிப்படையில் பயன்படுத்தவும், பின் நிரந்தரமாக இயக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இப்போது பிரதான முதல் ஓடுபாதையில் 1 மணிநேரத்தில் 30க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகிறது. 2 ஓடுபாதைகளும் ஒரே சமயத்தில் பயன்படுத்தும்போது 50க்கும் மேற்பட்ட விமானங்களை ஒரு மணிநேரத்தில் இயக்க முடியும். இதனால் அதற்குரிய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.