தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தவும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி நெசவாளர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் நடத்துவதாகவும் மற்றும் இந்த திட்டத்தினை அரசு கைவிட உள்ளதாகவும் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
இது குறித்த அரசு நிலைப்பாடு பின்வருமாறு, தமிழக அரசினால் 1983 ஆம் வருடம் வேட்டி சேலை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பொங்கல் பண்டிகையின் போது கிராமப்புறம் மற்றும் நகரப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் இந்த திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு தேவையான மொத்த சேலைகள் மற்றும் வேஷ்டிகள் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், கூட்டுறவு சங்கங்களின் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட ஏதுவாக வருவாய் துறைக்கு வழங்கப்படுகிறது.
இதன்மூலம் விசைத்தறி நெசவாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்குவதன் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள கிராமப்புற மற்றும் நகரத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் பயனடைகின்றனர். நடைபாண்டில் பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் தொடர்ந்து செயல்படுத்திட கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் தொடர்ந்து உற்பத்தி மேற்கொள்ளவும் அரசின் கொள்கை அளவிலான ஆணைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. இந்த திட்டத்திற்காக வரவு செலவு திட்டத்திலிருந்து 487.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.