தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக பள்ளிக்கல்வி கொள்கையை மத்திய பிரதேச அரசு வெளியிட்டுள்ளது. அதில், மாணவர்களின் புத்தக பைகளின் எடையை குறைப்பதற்கு முக்கிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி 1, 2 ஆம் வகுப்பு மாணவர்கள் 1.6 முதல் 2.2 கிலோ வரை பைகளையும்ண் 3,4,5 ஆம் வகுப்பு மாணவர்கள் 1.7 முதல் 2.5 கிலோ வரை பைகளையும் கொண்டு செல்ல வரைமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல 6,7 ஆம் வகுப்பு மாணவர்கள் 2 முதல் 3 கிலோ எடை பைகளையும், 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 2.5 முதல் 4 கிலோ பைகளையும், 9, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 2.5 முதல் 4.5 கிலோ பைகளையும் கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பைகளின் எடை குறித்து பள்ளிகளின் துறை சார்ந்து முடிவு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பாடத்திட்டம் சாராத கூடுதல் நடவடிக்கைகளில் மாணவர்களின் பங்கேற்பு அதிகரிக்க செய்யும் நோக்கில் வாரத்தில் ஒரு நாள் ‘புத்தகப் பைகள் இல்லாத நாளாக’ அனுசரிக்கப்படும் என்று மாநில பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. கணினி, பொது அறிவு, விளையாட்டு, உடற்பயிற்சிகள், சுகாதார தகவல்கள், கலைகள் உள்ளிட்டவை குறித்து அந்த நாளில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிய விதிகள் அனைத்தும் மாநிலத்தில் உள்ள 1.30 லட்சம் பள்ளிகளில் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றனவா? என்பதை குறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்று மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.