சென்னையில் பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதியுற்றனர்.
குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் சுரங்கப்பாதைகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், சில சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. அதன்படி, மழை நீர் பெருக்கு காரணமாக கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, ஆர்பிஐ சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன.