கார் மீது மரம் விழுந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள என்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அஸ்வின் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அஸ்வின் தனது மனைவி காயத்ரி, தாயார் ரஜினி தேவி, உறவினர் அஜய், அவருடைய மனைவி ஐஸ்வர்யா, மகள் சிவன்யா ஆகியோருடன் கேரளாவில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வதற்காக காரில் புறப்பட்டுள்ளார். இவர்கள் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டன் புதூர் பகுதியை தாண்டி காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையோரத்தில் இருந்த மரம் எதிர்பாராதவிதமாக சரிந்து கார் மீது விழுந்ததால் அஸ்வின் உட்பட 6 பேரும் படுகாயமடைந்தனர். இதனை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.