பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா சீனியர் சிட்டிசன்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பேங்க் ஆப் பரோடா வங்கி வோர்ல்ட் கோல்ட் (BOB World Gold) என்ற புதிய மொபைல் ஆப் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க சீனியர் சிட்டிசன்களின் வசதி மற்றும் பயன்பாட்டு நலனை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே சீனியர் சிட்டிசன்கள் இந்த ஆப் மூலமாக வங்கி சேவைகளை மிக எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இது தொடர்பாக பேங்க் ஆப் பரோடா வங்கியின் தலைமை அதிகாரி சஞ்சீவ் சத்தா தெரிவித்ததாவது: “சீனியர் சிட்டிசன் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக பல தேவைகள் உள்ளன. எனவே அவர்களுக்கு மாறுபட்ட அணுகுமுறை வேண்டும்.
சீனியர் சிட்டிசன்களின் தேவையை கருத்தில் கொண்டு வேர்ல்டு கோல்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகக் கூறினால் சீனியர் சிட்டிசன் பயன்படுத்தும் வகையில் மிக எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிய எழுத்துக்கள், போதிய இடைவெளி, தெளிவான மெனு என சீனியர் சிட்டிசன்களின் வசதிக்கு ஏற்ப இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்-பில் 250க்கும் மேற்பட்ட வங்கி சேவைகள் வழங்கப்படுகின்றன. இதில் சீனியர் சிடிசன்களுக்கு தேவையான சேவைகள், முதலீடு போன்றவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மருத்துவ சேவைகள் சார்ந்த வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.