உலகில் முதன் முறையாக கொரோனா வைரஸ் சீன நாட்டின் உகான் நகரில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது. அங்கு இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தடுப்பூசி உட்பட பல தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலகநாடுகள் இப்போது படிப்படையாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் சீனநாட்டில் சென்ற சில மாதங்களாகவே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் ஆகிய பல பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
உருமாறிய கொரோனா காரணமாக இத்தொற்று பரவல் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற 24 மணிநேரத்தில் சீனஉள்ளூர் நகரங்களில் 420 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி 455 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது. இதனிடையில் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதிசெய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த அடிப்படையில் 319 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதுவரையிலும் சீனநாட்டில் 2,26,610 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.