மகள் சிறுவனுடன் ஓடியதால் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மணியபுரத்தில் அங்கன்வாடி ஊழியரான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய 16 வயது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து முருகன் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் அந்த சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்டு சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வருமாறு கூறினார். அதன்பிறகு இரு தரப்பினரும் பேசி மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைக்க சம்மதித்தனர். இதனால் முருகன் தனது மனைவி மற்றும் மகளுடன் நீலகிரிக்கு செல்ல தயாராகினர். அப்போது திடீரென முருகன் மயங்கி விழுந்துவிட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மகள் சிறுவனுடன் ஓடியதால் அவமானத்தில் முருகன் விஷம் குடித்துவிட்டு சேலத்திற்கு வந்ததும், திடீரென மயங்கி விழுந்து இறந்ததும் தெரியவந்தது.