ஹர்திக் பாண்டியாவை தோனியுடன் ஒப்பிட்டு பேசி பாராட்டி உள்ளார் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா..
கடந்த 27ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. அதைத் தொடர்ந்து 28ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் என்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி களம் இறங்கி 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் இலக்கை எட்டியது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணம் ஹர்திக் பாண்டியா தான். இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் திணறியது. அப்போது ஜடேஜா – ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து பொறுப்பாக ஆடினர்.. அவசரப்படாமல் அதிகளவில் 2 ரன்கள் ஓடி எடுத்து கடைசி வரை போட்டியை கொண்டு சென்றனர்.. இறுதியில் 2 ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட, 19 ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா 3 பவுண்டரிகள் அடித்தது உட்பட 14 ரன்கள் இந்திய அணிக்கு கிடைத்தது.
கடைசி ஓவரில் 7 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் முதல் பந்தில் ஜடஜா சிக்ஸர் அடிக்க முற்பட்டு போல்ட் ஆகி ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் சிங்கள் எடுத்துக் கொடுக்க, பின்னர் ஸ்ட்ரைக்குக்கு வந்த ஹர்திக் பாண்டியா 3ஆவது பந்தில் ரன் எடுக்காததால் டாட் பாலானது. பின்னர் 4ஆவது பந்தில் அற்புதமாக சிக்சர் அடிக்க மைதானமே ஆர்ப்பரித்து வெற்றியை கொண்டாடியது. ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தது மட்டும் இல்லாமல் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் எடுத்ததால் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.. ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி கடைசி வரை நின்று தோனி போலவே பினிஷ் செய்ததாக பலரும் கூறி வருகின்றனர்.
இவரது ஆட்டம் குறித்து பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான ராபின் உத்தப்பா ஹர்திக் பாண்டியாவை தோனியுடன் ஒப்பிட்டு பேசி பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, தோனி போலவே போட்டியை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து ஹர்திக் பாண்டியா ஆடி இருக்கிறார்.. அந்த நோக்கத்தில்தான் ஹர்திக் பாண்டியா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது சிக்சர் அடித்து முடித்து கொடுத்திருப்பார்.
அதுமட்டுமில்லாமல் தோனியை மிகவும் நேசிக்க கூடியவர் ஹர்திக் பாண்டியா.. தோனியை அருகிலிருந்து நன்கு கவனித்ததன் காரணமாக அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட விஷயங்களை அப்படியே நாமும் சர்வதேச கிரிக்கெட்டில் செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்.. எனவேதான் ஹர்திக் பாண்டியா தோனி போலவே சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்துக் கொடுக்க முயற்சி செய்துள்ளார்.. அதோடு கிரிக்கெட் களத்தையும் தாண்டி தோனியிடம் நல்ல நட்புறவு கொண்ட பாண்டியா, தோனியை போலவே களத்தில் திறமையாக செயல்பட வேண்டும் என நினைப்பவர் என்று பாராட்டி பேசினார்..