Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உனது கணவரை கொன்று விடுவோம்” சினிமா பாணியில் நடந்த சம்பவம்…. கோவையில் பரபரப்பு…!!

சாமியாரை கடத்தி சென்ற மர்ம நபர்கள் 35 லட்ச ரூபாயை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தீத்திபாளையம்- கள்ளுக்கடை பிரிவு சக்தி கார்டன் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் சரவணன் ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடியில் மள்ளன்குழி ஆதீனம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி, யாகம், வேள்வி பூஜை மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தி சாமியார் போல செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சரவணன் தனது வீட்டிற்கு வெளியே நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது காரில் 5 பேர் வந்துள்ளனர்.

அவர்கள் உங்கள் மீது பேரூர் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது எனவும், அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனவும் கூறி சரவணனை அழைத்துள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்து அடையாள அட்டையை காண்பிக்குமாறு சரவணன் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த கும்பல் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி சரவணனை மிரட்டியதோடு, அவரது வாயில் துணியை வைத்து அமுக்கி, கை கால்களை கட்டி போட்டு காரில் பழனிமலை அடிவாரத்தில் இருக்கும் சாரதா ஆசிரமத்திற்கு கடத்தி சென்றுள்ளனர்.

இதனையடுத்து மர்ம நபர்கள் செல்போன் மூலம் பாக்கியலட்சுமியை தொடர்பு கொண்டு 1 கோடியே 10 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 100 பவுன் தங்க நகைகளை நாங்கள் சொல்லும் இடத்திற்கு வந்து தர வேண்டும்; இல்லை என்றால் உனது கணவரை கொன்று விடுவோம் எனக் கூறி விட்டு இணைப்பை துண்டித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பாக்கியலட்சுமி தனது சகோதரர்களோடு மர்ம நபர்கள் கூறிய பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் அவர்கள் வேறு வேறு இடங்களுக்கு வரசொல்லி பாக்யலட்சுமியை அலைகழித்துள்ளனர்.

அதன்பிறகு சங்ககிரி மெயின் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான ஒரு மணல் மேடு அருகே வருமாறு மர்மநபர்கள் கூறியுள்ளனர். அப்போது தன்னால் 35 லட்ச ரூபாய் தான் தர முடியும் என பாக்யலட்சுமி தெரிவித்துள்ளார். அதற்கு மர்மநபர்கள் அந்த பணத்தை மணல் மேட்டின் மீது வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் சென்று விடு என தெரிவித்துள்ளனர். அதன்படி பாக்யலட்சுமி பணத்தை வைத்தவுடன் அதனை எடுத்து கொண்ட மர்ம நபர்கள் உனது கணவரை காரில் அனுப்பி வைத்து விட்டோம் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் உங்கள் குடும்பத்தினரை கொன்று விடுவோம் எனக் கூறி மர்ம நபர்கள் பாக்கியலட்சுமியை மிரட்டியுள்ளனர். இதற்கிடையில் சரவணன் கோவைக்கு வந்துவிட்டார். இதனையடுத்து கணவன் மனைவி இருவரும் பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விக்கி உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தனிப்படை காவல்துறையினர் அந்த மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |