மகன் தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் காமராஜர் சாலையில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொடைக்கானல் நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும் தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் தினேஷ் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். தினேஷ் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது தினேஷ் தனது தந்தையை அடித்து துன்புறுத்தியுள்ளார். கடந்த 16-ஆம் தேதி சொத்தை பிரித்து தருமாறு தினேஷ் கேட்ட போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த தினேஷ் தனது தந்தையை உருட்டு கட்டையால் சரமாரியாக அடித்துள்ளார். இதனால் மயங்கி விழுந்த நடராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜ் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தினேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.