லாரியிலிருந்து டயர் மற்றும் இரும்பு கம்பிகளை திருடிய குற்றத்திற்காக 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த பகுதியிலுள்ள பழைய இரும்பு கடையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சரக்கு வாகன ஓட்டுனர்களான பிரவீன் மற்றும் பாலாஜி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளிலுள்ள பொருட்களை திருடி விற்று வந்தது தெரியவந்துள்ளது.
இந்த 2 நபர்களும் மன்னார்குடி தீயணைப்பு நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியிலிருந்து ரூபாய் 3000 மதிப்பிலான காப்பர் வயர்களை திருடியுள்ளனர். பின்னர் நீடாமங்கலம் சாலையிலுள்ள மாசாணியம்மன் கோவில் அருகே நின்றுகொண்டிருந்த லாரியிலுள்ள ரூபாய் 30,000 மதிப்பிலான டயர்கள் மற்றும் இரும்பு பொருட்களை திருடியுள்ளனர். இதுகுறித்து பிரவீன் மற்றும் பாலாஜி ஆகியோர் மீது வழக்குப்பதிந்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த டயர் மற்றும் இரும்பு பொருட்களை பறிமுதல் செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.