கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து மாட்டுத்தீவனம் லோடு ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை 19-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். மேலும் லாரி சாலையோரமாக கவிழ்ந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மூலம் லாரியை மீட்டனர். இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.