மணமகனின் உறவினர்களுக்கு தாமதமாக சாப்பாடு பரிமாறப்பட்டதால் திருமணம் நின்று போனது.
பீகார் மாநிலத்தில் பட்டுவானா கிராமத்திலுள்ள மோஹானி பஞ்சாயத்தில் இஸ்வாரி தோலாவில் திருமண நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் பூர்னியாவை சேர்ந்த ராஜ்குமார் ஒராவ்ன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மீனா தேவி என்பவரின் மகளுக்கும் தான் திருமணம் நடைபெற இருந்துள்ளது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணமகனின் உறவினர்களுக்கு தாமதமாக சாப்பாடு பரிமாறப்பட்டது. இதை அறிந்த மணமகனும் அவரது தந்தையும் ஆத்திரம் அடைந்து திருமணத்தை நிறுத்தி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக உள்ளூர் பஞ்சாயத்துதாரர்கள் இரு வீட்டாரிடமும் சமாதானம் பேசியும் எதுவும் நடக்கவில்லை. இதனையடுத்து மணமகன் மண்டபத்தை விட்டு வெளியேறி இருக்கிறார். இதனால் மாப்பிள்ளையின் தந்தை திருமணத்திற்காக பெண் வீட்டார் கொடுத்த பொருட்களை திருப்பி கொடுத்துவிட்டு, திருமண சமையலுக்கு செலவான பணத்தையும் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து பெண்ணின் தாயார் மீனா தேவி போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.