தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அமமுக கூட்டணி அமைய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கோட்டையாக கருதப்படும் பெரியகுளத்தில் திடீர் திருப்பமாக ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக திமுகவை சேர்ந்த தங்கவேல் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே 3 முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி நான்காவது முறையாக இன்று மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதிமுக தலா 7, தேமுதிக 1, அமமுக 1 வாக்குகள் பெற்றது.
மேலும் திமுக மற்றும் அதிமுக சமமாக இருந்த நிலையில், திடீர் திருப்பமாக தேமுதிக மற்றும் அமமுக உதவியுடன் திமுக 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் சொந்த ஊரில் இப்படி நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுக வெற்றி பெறுவதற்கு அமமுக ஆதரவு தெரிவித்திருப்பது, சட்டமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணி வைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.