அறிவியல் கண்காட்சியில் விருது பெற்ற மாணவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
சர்வதேச அளவில் சமுதாய புதுமை கண்டுபிடிப்புகளுக்கான நிலையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இளைஞர்களின் முயற்சி என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி கடந்த 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற்றுள்ளது. இதில் 164 நாடுகளில் இருந்து 43 படைப்புகள் சர்வதேச அளவில் பங்கு பெற்றன. இந்தியாவில் இருந்து 31 படைப்புகளும், எகிப்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 12 படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவரான பூவரசன் என்பவர் அலைபேசி ப்ளூடூத் மூலம் ரோபோவை கட்டுப்படுத்தி இயக்கும் படைப்பை காட்சிப்படுத்தியுள்ளார்.
அதே பள்ளியில் படிக்கும் யுவராஜா என்ற மாணவர் இலக்கை கண்டுபிடிக்கும் ரோபோ படைப்பை காட்சிப்படுத்தியுள்ளார். இந்த கண்காட்சியில் பூவரசனுக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. மேலும் சர்வதேச அளவில் இளம் ஐன்ஸ்டீன் என்ற சாதனை பாராட்டு சான்றிதழும், விருதும் பூவரசனுக்கு வழங்கப்பட்டது. மேலும் யுவராஜுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பூவரசனை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் அங்கையர் கன்னி, முதன்மை கல்வி அலுவலர், நேர்முக உதவியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.