இலங்கையில் முறையான உணவு கிடைக்காமல் தவித்து வரும் தமிழக மீனவர்களை மீட்குமாறு மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 12 மீனவர்கள் கடந்த 2ஆம் தேதி மீன்பிடிக்க விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். இந்நிலையில் அவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு மண்டபம் பகுதியை சேர்ந்த 20 மீனவர்களையும் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தற்போது இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியான சூழல் நிலவி வருவதால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த 32 மீனவர்களுக்கு சரியாக உணவு கிடைக்காமல் அவதிபடுவதாக கூறப்படுகிறது. எனவே தமிழக மீனவர்கள் அனைவரையும் மீட்கும்படி மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.