சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை ஆர்.என்.புதூர் குடிசை மாற்று வாரிய பகுதியில் கட்டிட தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் சமையல் செய்வதற்காக சரண்யா வீட்டில் இருந்த ஸ்டவ்வை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சரண்யாவின் சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது.
இதனால் வலியில் சரண்யா அலறி சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சரண்யாவின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.