நாகையில் சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் கீழ்வேளூர் காவல்துறையினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குற்றம்பொருந்தானிருப்பு மதகடி பகுதியில் வசித்து வரும் தனபால் என்பவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.
அதேபோல் ராதாமங்கலம் பகுதியில் வசித்து வரும் முருகையன் என்பவர் அதே பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.