Categories
அரசியல் மாநில செய்திகள்

“சட்டசபை”… இவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்……!!!!!

தமிழக சட்டசபையில் துறைகள் வாரியாக மானியகோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று உயர்கல்வி, பள்ளி கல்வித்துறைகள் மீதான மானியகோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்கு எதிரான தனிதீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியிருப்பதாவது “மாநிலத்தின் கல்வி உரிமையின் மீது மத்திய அரசின் தாக்குதல் தொடர்கிறது. பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியுதவியுடன் செயல்படும் அனைத்து மத்திய பல்கலைக்களிலும் இளங்கலை உள்ளிட்ட பல படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு பொது நுழைவுத்தேர்வு என்று அறிவித்து, வரும் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் செயல்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள்கூட இளங்கலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பீடிகை போட்டு ஓர் அறிவிப்பை மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.

அதை எதிர்த்து இம்மாமன்றத்தில் பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழக மானியக்குழு 2022-2023-ம் கல்வியாண்டு முதல் அந்த மானியக்குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்தியபல்கலைக்கழகங்களிலும், இளங்கலை உள்ளிட்ட பல படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (கியூட்) வாயிலாக மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது. பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல், பொதுபல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் சேர்க்கை நடைபெறும் என்றும் மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. தேசியகல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகுழு பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்ட எந்தவொரு நுழைவுத்தேர்வும், நாடு முழுதும் உள்ள பல மாநில பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்காது என்று இந்த பேரவை கருதுகிறது.

ஏராளமான மாநிலங்களில், மொத்த மாணவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் மாநில பாடத்திட்டங்களில் படித்து வருபவர்கள். இவர்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை பிரிவினரை சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஆகவே அந்த பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவுத்தேர்வு, மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு தகுதியான பெரும்பான்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துவதோடு இச்சூழ்நிலை நமது நாட்டில் உள்ள பல மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணைப்பு கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் எனவும் இந்த பேரவை கருதுகிறது. இந்த நுழைவுத் தேர்வும் “நீட்” தேர்வை போன்றே நாடு முழுவதும் உள்ள பல பள்ளிக்கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் நீண்டகால கற்றல் முறைகளை வெகுவாக குறைத்து மதிப்பிட வழிவகுப்பதோடு, மாணவர்கள் தங்களது நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களை சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்தி விடும் என்பதில் சந்தேகம் கிடையாது.

அத்துடன் மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போல் வளர மட்டுமே இது சாதகமாக அமையும் என்று தமிழ்நாடு மக்களிடையே அச்சம் எழுந்து இருக்கிறது. அவ்வாறு ஒரு நுழைவுத்தேர்வை செயல்முறைக்கு கொண்டு வருவதால் பள்ளிக்கல்வியோடு பயிற்சி மையங்களையும் நாடும் இளைய மாணவ சமுதாயத்தினர் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்படுவார்கள். ஆகையால் மாநில அரசுகளின் உரிமையை நிலைநாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் பல படிப்புகளில் சேருவதற்காக நடத்த இருக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை ரத்து செய்திட மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது எனும் தீர்மானத்தை நான் மொழிகிறேன் என்று அவர் கூறினார். அதனை தொடர்ந்து பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Categories

Tech |