சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சித்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதுப்பேட்டை பழைய சப் ஜெயில் சாலையில் சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு பூஜையில் விநாயகருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி மற்றும் 608 லிட்டர் பால் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்துள்ளது. இந்த சிறப்பு பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கை ஏற்றி விநாயகரை வழிபட்டுள்ளனர். மேலும் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளார்.
இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காந்தி சாலையில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோவில், வினை தீர்த்த விநாயகர் கோவில், ஞான விநாயகர் கோவில், வலம்புரி விநாயகர் கோவில் மற்றும் சேலம் சாலையில் அமைந்துள்ள ஆதி சக்தி விநாயகர் கோவில் என அனைத்து விநாயகர் கோயில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் அன்னதானங்களும் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டுச் சென்றுள்ளனர்.