மத்திய பிரதேசத்தில் “சகோதரர்கள் நலச்சங்கம்” எனும் தன்னார்வ அமைப்பு சென்ற 2014-ம் வருடத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு வரதட்சணை கொடுமை, விவாகரத்து போன்ற வழக்குகளால் பாதிக்கப்படும் ஆண்களுக்காக குரல் கொடுத்து வருகிறது. அத்துடன் இலவச சட்ட உதவியும் வழங்கி வருகிறது. இந்நிலையில் நீண்ட கால சட்ட போராட்டத்திற்கு பிறகும், ஏராளமான பணத்தை ஜீவனாம்சமாக அளித்தும் சென்ற 2, 3 வருடங்களில் விவாகரத்து பெற்ற 18 ஆண்களை அழைத்து ஒரு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்து உள்ளது.
வரும் 18ம் தேதி போபால் அருகில் ஒரு சொகுசு விடுதியில் இந்த கொண்டாட்டம் நடக்கிறது. இதற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ், சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தகைய கொண்டாட்டம் இந்திய கலாசாரத்துக்கு எதிரானது என பலர் அந்த சங்கத்தின் அமைப்பாளர் ஜாகி அகமதுவிடம் தெரிவித்து வருகின்றனர். எனினும் மோசமான திருமணங்களில் சிக்கிய ஆண்கள், தற்கொலை முடிவை எடுக்காமல் விவாகரத்து பெறுவதே தங்களது விருப்பம் என ஜாகி அகமது தெரிவித்துள்ளார்.