கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பில் கைதான 6 பேருக்கும் நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் கார் வெடித்து சிதறிய இடத்தில் சிறிய அளவிலான இரும்பு குண்டுகள், ஆணிகள் உள்ளிட்டதை சிதறி கிடந்தது.தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டதை தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் பலியான ஜமேஷா முபின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அவரது வீட்டிலிருந்து வெடி மருந்துகளையும் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் கூடுதல் குற்றவாளிகளாக மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23) , ஜி எம் நகரை சேர்ந்த முகமது ரியாஸ் (27) , ப்ரோஸ் இஸ்மாயில் (27) , முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதற்குப் பிறகு முபினின் பெரியப்பா மகன் அப்சர் கான் என்ற நபர் கைது செய்யப்பட்டார். மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த வழக்கு தேசிய பாதுகாப்பு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..