Categories
மாநில செய்திகள்

கோவை சம்பவம் பற்றி 3 ஆலோசனைகள்…. முதல்வருக்கு அட்வைஸ் கூறும் அண்ணாமலை…..!!!!

கோவை உக்கடம் அருகில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு சென்ற 23ஆம் தேதி அன்று அதிகாலை மாருதிகார் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இவற்றில் காரிலிருந்த நபர் உடல் கருகி இறந்தார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது. இவ்வாறு காரில் சிலிண்டர் வெடித்து இறந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019ம் வருடத்தில் இவரிடம் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.

அதன்பின் ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் ஆகிய பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடிமருந்துகளை கைப்பற்றினர். இந்த வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறைச்சாலையில் அடைத்தனர்.

அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற வெடி விபத்து விவகாரம் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் முதல்வர் ஸ்டாலின் என்ஐஏ அமைப்பு விசாரணைக்கு பரிந்துரைத்து இருக்கிறார். இந்த நிலையில் இதனை  வரவேற்பதாக தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அதாவது, அண்ணாமலை பதிவில் “கோவை தற்கொலைப்படை தாக்குதலின் விசாரணையை தமிழக முதலமைச்சர் தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரைத்ததை பா.ஜ.க வரவேற்கிறது. இது போன்ற சம்பவங்கள் மீண்டுமாக நிகழாமல் இருக்க சில ஆலோசனைகளை உங்களுக்கு வழங்க கடமைப்பட்டு இருக்கிறோம்.

# தேச விரோத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள்.

# தமிழக காவல்துறையின் உளவுத்துறையானது உலக புகழ்பெற்றது ஆகும். அண்மை காலமாக ஏற்பட்டிருக்கும் தொடர் தோல்விகளுக்குப் பின் உளவுத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை உடனே முன்னெடுங்கள்.

# திமுக-வினர் தங்களது சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு காவல்துறையினரை பயன்படுத்தாமல், தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடுங்கள்.

நீங்கள் பதவி ஏற்கும்போது அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று அரசை நடத்துவீர்கள் எனும் உறுதிமொழியை அளித்தீர்கள். மேற்குறிப்பிட்ட ஆலோசனைகளை நீங்கள் நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம். தேசத்தின் நன்மையை கருதி நீங்கள் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் தமிழக பா.ஜ.க உறுதுணையாக இருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |