Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கோவை அரசு பொருட்காட்சி”…. பார்த்து மகிழ்ந்த பழங்குடியின மக்கள்…..!!!!

கோவையில் அடர்ந்த வனப் பகுதிக்குள் மலைவாழ் குடியிருப்பு அதிகளவில் இருக்கிறது. இங்கு பெரும்பாலான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பல பேர் வனக் குழுவில் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் வனப் பகுதியை பாதுகாத்து வருவதுடன், கோவை வனப்பகுதியிலுள்ள எல்லையை வகைப்படுத்தவும் உதவியாக இருக்கின்றனர். ஆகவே பழங்குடியின மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கோவையில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியை பழங்குடியின மக்கள் இலவசமாக பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் கோவை மாவட்டம் பில்லூர் அணை பகுதியிலுள்ள பழங்குடியின மக்கள் அரசு பொருட்காட்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்ட அனைத்தையும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது “கோவை மாவட்டத்தில் பில்லூர் அருகேயுள்ள சித்துகுனை, பூச்சமரத்தூர், சிறுகிணறு, கெத்தைக்காடு, வீரகல், கடாமான்கோம்பை, மேல் பில்லூர், பரளிக்காடு, நெல்லிமரத்தூர், குண்டூர், சொரண்டி, குறவன் கண்டி, எழுத்துக்கல்புதூர், கூடப்பட்டி, அரக்கடவு போன்ற மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த 110 பழங்குடியின மக்கள் இந்த கண்காட்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இங்கு அவர்கள் வந்து அரசுத் துறையில் என்னென்ன பிரிவுகள் இருக்கின்றன என்பதையும், இந்த பொருட்காட்சியில் வைக்கப்பட்டுள்ள அனைத்தையும் கண்டுரசித்தனர். கோவையில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வனஉரிமை சட்டத்திலுள்ள உரிமைகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியின் எல்லையை வரைந்து வரைபடம் தயாரித்து கணக்கிடப்பட்டது. இப்போது தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில்தான் ஜி.பி.எஸ். உதவியுடன் வரைபடம் தயாரிக்கப்பட இருக்கிறது.

இவற்றில் வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் வனக்குழுவில் உறுப்பினர்களாகவுள்ள பழங்குடியின மக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதனிடையில் 4 மாதங்களில் பணிகள் முடிவடைந்து விடும். இப்பணியில் ஈடுபட அதிகாரிகள்  போகும்போது, அவர்களை பார்த்து பழங்குடியின மக்கள் பயந்துவிடக்கூடாது என்பதற்காகவும், அதிகாரிகள், பழங்குடியின மக்களிடையே நல்லுறவு ஏற்படுத்தும் அடிப்படையில்தான் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதுபோல் பழங்குடியினத்தை சேர்ந்த போட்டித் தேர்வு எழுதுபவர்கள் அரசு அலுவலகங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டு விளக்கம் கொடுக்கப்பட்டது. அத்துடன் பழங்குடியின மக்களுக்கு இலவசமாக உணவு, டிக்கெட் வழங்கப்பட்டது” என்று அவர்கள் கூறினார்கள்.

Categories

Tech |