திருச்செந்தூர் முருகன் கோவில் இந்த வருடம் கந்த சஷ்டி வரும் 4ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த நிலையில் கந்தசஷ்டி திருவிழா நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி கிடையாது.
சூரசம்காரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுமே யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இதனை மக்கள் கண்டு களிக்கலாம். மேலும் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதியளிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், திருச்செந்தூர் கோவிலில் சஷ்டி விரதம் இருக்க யாருக்கும் அனுமதி கிடையாது. விடுதியில் தங்கியிருந்த கோயில் வளாகத்தில் அமர்ந்து விரதம் இருக்கவும் அனுமதி இல்லை என்று கூறினார்.