குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றபோது கூலித்தொழிலாளி வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள மார்க்கையன்கோட்டை கிராமத்தில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரெஜினா திருமணம் முடிந்து வந்தவாசியில் வசித்து வரும் நிலையில் தற்போது கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளைச்சாமி தனது குடும்பத்தினருடன் திருவிழாவை காண்பதற்கு வீட்டை பூட்டி சாவியை ஜன்னலில் வைத்துவிட்டு கோவிலுக்கு சென்றார்.
இதனை மர்மநபர்கள் சிலர் நோட்டமிட்டு வெள்ளைச்சாமியின் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த ரெஜினாவின் 12 பவுன் நகைகள் மற்றும் 20,000 ரூபாயையும் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய குடும்பத்தினர் பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து உடனடியாக சின்னமனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து வெள்ளைச்சாமி வீட்டில் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.