வங்காளதேசத்தில் பஸ் மீது ரெயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்காளதேசத்தில் சிட்டகாங் மாவட்டத்தில் மிர்ஷாராய் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஆளில்லா ரெயில்வே கிராசிங்கை பஸ் கடக்க முயலும் போது எதிர்பாராத விதமாக எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீடகப்பட்டு சிட்டகாங் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து மிர்ஷாராய் காவல்துறை அதிகாரி கபீர் உசைன் கூறியதாவது, “டாக்கா நோக்கி செல்லும் ப்ரோவதி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பஸ் மீது ரெயில் மோதி சில மீட்டர் துரத்திற்கு இழுத்து சென்றது. இதில் சிக்கி 7 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர்கள் என 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பஸ்சில் பயணித்த அனைவரும் படுகாயமடைந்துள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அவர்கள் குடும்பத்தினரிடம் மாலைக்குள் ஒப்படைக்கப்படும் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.