நீதிமன்றத்தில் இருந்து தவறுதலாக அனுப்பப்பட்ட 1.50 லட்சத்தை திரும்பி வழங்காத மூதாட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேலம் தலைமை குற்றவியல் கோர்ட்டு சிராஸ்தார் செந்தில்குமார் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்ற 2016 ஆம் வருடம் தாரமங்கலம் அருகே இருக்கும் பாறைக்கல்லூர் பகுதியை சேர்ந்த சுசிலா என்பவர் ஒரு வழக்கு சம்பந்தமாக 1.50 லட்சம் அவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த தொகையானது அவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டது.
பின் தவறுதலாக 2017 ஆம் வருடம் மீண்டும் 1.50 லட்சம் அவருக்கு அனுப்பப்பட்டது ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து கோர்ட் அலுவலர்கள் இது பற்றி சுசிலாவிடம் பேசிய போது தவறுதலாக அனுப்பப்பட்ட பணத்தை திரும்ப செலுத்துமாறு கூறினார்கள். ஆனால் அவர் பணத்தை திரும்பி வழங்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை அடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.