கோத்தகிரி அருகே உள்ள விநாயகர் சிலையின் கண் திறந்ததாக தகவல் பரவியதால் கோவிலுக்கு பக்தர்கள் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியிலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் பெட்டட்டி சுங்கம் கிராமம் இருக்கின்றது. இந்த கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ள நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பின் சுவாமிக்கு தீபாராதனை நடந்த பொழுது விநாயகர் சிலையின் கண் திறந்து மூடியதாக சொல்லப்படுகின்றது. சில நொடிகள் விநாயகர் சிலை கண் திறந்ததாக பக்தர்கள் கூறியதையடுத்து தகவல் அறிந்த கிராம மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதியில் இருந்த மக்களும் காண்பதற்காக கோவிலில் குவிந்தனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.