இறால் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:
இறால் – 1/2 கிலோ
வெங்காயம் – 2 பெரியது
தக்காளி – 2 பெரியது
இஞ்சி,பூண்டு விழுது – 1/2தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகுத் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
தனியாத்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் இறாலை எடுத்து தோல் நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
பிறகு மிக்சிஜாரில் இஞ்சியையும், பூண்டையும் போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் சோம்பு, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.
பின்னர், அதில் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதங்கியபின், நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும்.மேலும் அதில் தக்காளி நன்கு வதங்கியவுடன், அதில் உப்பு, மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அதில் இறாலை போடவும் பத்து முதல் 15 நிமிடங்கள் வதக்கினால் போதும். இறக்கும்போது மிளகுத்தூள் சோம்புத்தூள் போட்டு கெட்டியாக வரும் வரை கிளறி விடவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறினால் சுவையான இறால் தொக்கு தயார்.