நாட்டில் கொரோனா தொற்று காரணமாக குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்களா என்றும், 12 முதல் 18 வயது மற்றும் ஐந்து முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் தற்போதைய நிலை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு சுகாதார இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அப்போது அவர், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே ஏற்படும் கொரோனா வைரஸ் தொற்று பொதுவாக பெரியவர்களைவிட குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ஒமைக்ரான் மற்றும் அதன் துணை தொற்றுகள் 7,362 மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளன. ஜனவரி 1, 2022 முதல் ஜூலை 25, 2022 வரை 0-18 வயதுடைய குழந்தைகளில் பகுப்பாய்வு செய்யப்பட்ட 118 மாதிரிகளில் டெல்டா மற்றும் அதன் துணை தொற்று வகைகள் கண்டறியப்பட்டதாக கூறினார். உலக சுகாதார அமைப்பின்படி குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே சார்ஸ் கொரோனா தொற்றுகள் பொதுவாக பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குறைவான கடுமையான நோயை ஏற்படுத்துகின்றன” என்று பவார் கூறினார்.