நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் அகவிலைப்படி ஏற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்களின் மாறக்கூடிய அகவிலைப்படி மாதத்திற்கு 105 ரூபாயிலிருந்து 210 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒன்றரை கோடி தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்றும், இந்த புதிய அகவிலைப்படி உயர்வானது 2021 ஏப்ரல் 1-ஆம் நாள் முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் திட்டமிடப்பட்ட வேலைகளுக்கான ரயில்வே சுரங்கம், எண்ணெய் வயல் முக்கிய துறைமுகங்கள் ஆகியவற்றின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் அல்லது மத்திய அரசால் நிறுவப்பட்ட கழகங்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதமும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.