சென்னையில் கொரோனா பாதிப்பால் குடியிருப்புகள் அடைக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் தடுப்புகள் கொண்டு குடியிருப்புகள் அடைக்கப்படும் சம்பவம் நடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சைதாப்பேட்டையில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் ஏழு வீடுகளில் 14 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து குடியிருப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கடைப்பிடித்த நடைமுறைகள் அனைத்தும் மீண்டும் அமல் ஆகியுள்ளது.