கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்று 100க்கும் கீழ் குறைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திமுக நகர நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியுள்ளதாவது, திமுக மீது மக்கள் வைத்த நம்பிக்கையே, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வெற்றியாகும்.மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு- மக்கள் திமுக மீது வைத்த நம்பிக்கையை காட்டுகிறது.
எனவே எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ திமுக மக்களுக்காக பணியாற்றி கொண்டிருக்கிறது. மேலும் எதிர்க்கட்சியாக இருந்த போதே, மக்களுக்காக திமுக இயக்கம் செயல்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பேசிய அவர், கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தபட்ட மாநிலம் தமிழகம் என்ற பெயரைப் பெற்று உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி அன்று தமிழகத்தில் கொரோனாவால், 124 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து தற்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்று எண்ணிக்கையானது 100க்கும் கீழ் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் நேற்றைய நாளில் 95 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.