வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற குமரி கொத்தனார் மரணத்தில் மர்மம் இருப்பதாக மனைவி மனு கொடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகில் வெண்டலிகோடு பம்பச்சைக்கரைக் காட்டில் வசித்து வந்தவர் கொத்தனார் தேவதாஸ்(52). இவருடைய மனைவி தங்கலீலா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளார்கள். தேவதாஸ் சவுதி அரேபியா நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் தனது அறையில் தற்கொலை செய்துள்ளதாக மனைவி தங்கலீலாவுக்கு தகவல் வந்துள்ளது. இதை கேட்டதும் தங்கலீலாவும், அவருடைய குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தேவதாசின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனைவி தங்கலீலா சவுதி அரேபியாவில் இருக்கின்ற இந்திய தூதரகத்திற்கும் குமரி மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பினார். அந்த மனுவில் தேவதாசின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உள்ளார். தேவதாஸ் மரணமடைந்து ஒரு மாதம் ஆகியும் இதுவரை அவருடைய உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரவில்லை என்பதால் அவருடைய குடும்பத்தினர் ஆழ்ந்த சோகத்தில் இருக்கின்றார்கள்.