தேர்தல் பறக்கும் படையினர் கொடைக்கானல் அருகே வாகன சோதனையின் போது முட்டை வியாபாரியிடம் ஆவணம் இல்லாத ரூ. 75 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் கொடைக்கானல் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானல்-வத்தலகுண்டு சாலையில் மயிலாடும்பாறை என்னுமிடத்தில் நேற்று முன்தினம் மாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சரக்கு வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனையில் ரூ.74 ஆயிரத்து 930 பணம் கொண்டு செல்வது தெரியவந்தது. அந்த பணம் குறித்து சரக்கு வேனில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் உசிலம்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பதும், அவர் முட்டை வியாபாரம் செய்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரிந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் அந்த பணம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.