திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே சீசன் தொடங்கியதால் கொடைக்கானலில் உறைபனி நிலவுகிறது. மேலும் கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதனால் கொடைக்கானல் மூஞ்சிக்கல், கலையரங்கம், ஏரிச்சாலை, உகார்த்தேநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் அடர் பனிமூட்டம் நிலவியதால் பகல் நேரத்திலேயே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி வாகனங்களை இயக்கியுள்ளனர். இதனையடுத்து கடும் குளிரும், லேசான சாரல் மழையும் பெய்ததால் பொதுமக்களும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.