நாகப்பட்டினத்தில் அரசு பேருந்திலிருந்து தடுமாறி கீழே விழுந்த முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பறவை அந்தோனியார் கோவில் தெருவில் 62 வயதான அமிர்தலிங்கம் எனும் முதியவர் வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு காய்கறிகள் வாங்குவதற்காக சந்தைக்கு சென்றுள்ளார். அதன் பின் சந்தையிலிருந்து காய்கறி மூட்டையை வாங்கி விட்டு அரசு பேருந்தில் ஏறி நாகப்பட்டினத்திற்கு வந்துள்ளார். நாகை புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்தவுடன் காய்கறி மூட்டைகளை எடுத்துக்கொண்டு அமிர்தலிங்கம் கீழே இறங்கினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக முதியவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் அமிர்தலிங்கத்திற்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அமிர்தலிங்கத்தை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அமிர்தலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வெளிப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.