கைலாச என்ற தீவு நாட்டை உருவாக்கியுள்ளதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பிலிருந்தே நித்யானந்தா கூறி வருகிறார். கைலாச நாட்டிற்கான பாஸ்போர்ட் மற்றும் விசா போன்றவற்றை வெளியிட்டு வைரலாக்கி வந்தார். ஆனால் இந்த கைலாச நாடு எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் கைலாச நாட்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என நித்தியானந்தா ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் பிளம்பர் தொடங்கி வெளியுறவு துறை வரை பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் தங்குமிடம்,உணவு மற்றும் பயிற்சி அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. கைலாச நாட்டில் 25 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உள்ளதாக நித்தியானந்தா சார்பில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்தால் போதும். தேர்வு செய்யப்படுபவர்கள் பெங்களூர், திருவண்ணாமலை, காசி,சேலம் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட கைலாச மையங்களில் ஓராண்டு பயிற்சி வழங்கப்பட்டு பின்னர் பணி அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.