கேரள மாநிலத்தில் தக்காளி காய்ச்சல் என்ற ஒருவகையான வைரஸ் காய்ச்சல் 85 குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த காய்ச்சல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை குறி வைத்து தாக்குகிறது. இதன் காரணமாக சருமத்தில் சிவப்பு சிவப்பாக திட்டுக்கள் ஏற்படுவதால் இது தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. கொல்லம் மாவட்டத்தில் மட்டும் அதிக பாதிப்புகள் இருப்பதால் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இது குறித்து குறித்து தமிழக மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். அது சாதாரண வைரஸ். தக்காளிக்கும் இந்த வைரசுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சிக்கன்குனியா பாதிப்பு ஏற்பட்டு குணமான குழந்தைகளுக்குத்தான் இந்த நோய் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தண்ணீரில் உற்பத்தியாகும் ஒரு சில கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் வர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது இது குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.