குவைத் மற்றும் சவுதியில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த முத்துக்குமரன் மற்றும் சின்னமுத்து புறவியான் போன்றோரது குடும்பங்களுக்கு உரிய நீதியும் இழப்பீடும் கிடைக்க மதிய மாநில அரசுகள் இந்திய தூதரகத்தின் வழியாக துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன் என்பவர் வேலைக்கு சென்ற சில நாட்களிலேயே குவைத் நாட்டில் சித்திரவதை செய்து சுட்டுக் கொல்லப்பட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. இதேபோல திருச்சி வடக்கு சீத்தாப்பூர் காவிரிப்பாளையத்தை சேர்ந்த சின்னமுத்து என்பவர் சவுதியில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக அவர்கள் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இந்த துயர சம்பவங்கள் பற்றி வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தமிழக அரசு இதுவரை கண்டு கொண்டதாக தெரியவில்லை.
மேலும் முத்துக்குமரன் மற்றும் சின்னமுத்து போன்றோரது குடும்பங்களுக்கு உரிய நிதியும் இழப்பீடும் கிடைக்க மத்திய மாநில அரசுகள் இந்திய தூதரகத்தின் வழியாக துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதனால் முதல்வர் இதில் நேரடியாக தலையிட்டு குவைத் மற்றும் சவுதியில் இருந்து இருவரின் உடல்கள் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கும் அவர்களது குடும்பத்திற்கு இழப்பீடு பெற்று தருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இத்தகைய துயர சம்பவங்கள் இனி நடைபெறாத படி தடுப்பதற்கு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையின் சார்பில் உரிய நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.