குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் வரிசையில் நின்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வருடம் தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் நிலவும். இந்த மாதங்களில் இங்கு குளிர் காற்று வீசும் நிலையில், சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இங்கு இருக்கின்ற அருவிகளில் தண்ணீர் கொட்டும். ஆனாலும் இடையிடையே இதமான வெயில் அடிக்கும். இந்த சீசனை அனுபவிக்க அருவிகளில் குளிக்க ஆயிரக்கணக்கானோர் குற்றாலம் வந்து செல்வார்கள். கடந்த சில தினங்களுக்கு முன் குற்றாலத்தில் பெய்த சாரல் மழையால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் அதிகமாக பெருக்கெடுத்து ஓடியது.
அதன்பின் மழை இல்லாததால் அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக குற்றாலம் பகுதியில் குளிர்ந்த காற்று வேகமாக வீசி வருகிறது. நேற்று முன்தினம் காலை குற்றாலம் ஐந்தருவி பகுதியில் லேசான சாரல் மழை துறி உள்ளது. ஐந்தருவியில் உள்ள மூன்று கிளைகளிலும் தண்ணீர் நன்றாக விழுகின்றது. இதனால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் வரிசையில் நின்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். வழக்கம்போல் தென் மேற்கு பருவமழை ஆரம்பித்ததும் குற்றாலத்தில் சாரல் மழை தொடங்கும். தற்போதைய சூழல் நீடித்ததால் விரைவில் குற்றாலத்தில் சீசன் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகின்றது.