சென்னையில் குப்பை லாரிகளை இயக்க நேரம் நிர்ணயிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் இரவில் மட்டுமே குப்பை லாரிகளை இயக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அதில், வெளிநாடுகளைப் போல சென்னையில் குப்பை லாரிகளை இரவில் இயக்க உத்தரவிட வேண்டும். பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் குப்பை லாரிகளை இயக்குவதால் மாணவர்கள், பொதுமக்கள், பணிக்கு செல்வோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே காலை 7 முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னையில் குப்பை லாரிகளை இயக்கும் நேரத்தை நிர்ணயம் செய்ய முடியாது என்று கூறிய நீதிமன்றம் பள்ளி, அலுவலகம் செல்லும் நேரத்தில் குப்பை லாரிகளை இயக்க தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.