சாலை வசதி இல்லாத மலை கிராமத்திற்கு குதிரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது.
தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குரங்கணி மலை கிராம பகுதிகளான முட்டம், முதுவாக்குடி, டாப் ஸ்டேஷன் வனப்பகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு சாலை வசதி இல்லாத காரணத்தினால் மண்டல அதிகாரி திரு சிவகுமார் தலைமையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் குதிரையில் கொண்டு செல்லப்பட்டன.
நான்கு அதிகாரிகளும் துப்பாக்கி ஏந்திய நான்கு காவலர்களுடன் மூன்று குதிரைகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்களுடன் குரங்கனியிலிருந்து இருந்து 7 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த மலைப்பகுதியில் நடைபயணமாக எடுத்து செல்லப்பட்டன. முட்டம், முதுவங்குடி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல் பகுதிகளில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்காத காரணத்தினால் அப்பகுதி மக்கள் தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.