ஆலங்குளம் – மதயானைபட்டி சாலையில் சென்று வந்த அரசு பேருந்து நிறுத்தப்பட்டதால் பொது மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் சூரியூர் ஊராட்சி இருக்கிறது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஆலங்குளத்தில் இருந்து வில்லாரோடை பாதையாக மதயானை பட்டி ஊராட்சி வரை சுமார் ஆறு கிலோ மீட்டர் அளவிற்கு புதிதாக தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலை வழியாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை ரோடு, நாகமங்கலம் மார்க்கத்தில் மதயானைபட்டி மற்றும் ஆலங்குளம் வழியாக இலுப்பூருக்கு அரசு பேருந்து ஒன்று சென்றது.
மணிகண்டம், திருச்சி, நாகமங்கலம் சென்று வருவதற்கு அப்பகுதியை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் நிறுவனங்களுக்கு சென்று வேலை பார்க்கும் பணியாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் அனைவரும் அந்தப் பேருந்தில் சென்று பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மதயானைபட்டி கோரையாற்றில் அரசு மணல் குவாரி அமைத்துள்ளது.
அதனால் அந்த மணல் குவாரிக்கு வந்து சென்ற லாரிகள், மணல் ஏற்றி அதிக எடையுடன் மதயானைபட்டி ஆலங்குளம் ரோடு வழியாக சென்று வந்ததால் அந்த தார்சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போய் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் அந்த சாலையில் நான்கு சக்கர வாகனங்கள், மோட்டார் வாகனங்கள் ஓட்டி செல்பவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.
இந்தநிலையில் ஆலங்குளம் – மதயானைபட்டி சாலை குண்டும் குழியுமாக கிடந்ததால் அந்த வழியாக திருச்சியில் இருந்து இலுப்பூருக்கு சென்று வந்த அரசு பேருந்து கடந்த ஒரு ஆண்டுகாலமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பேருந்தை நம்பியிருந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் நிறுவனங்கள் வேலைக்கு சென்று வரும் பணியாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் விராலிமலை அல்லது பேராம்பூர் வழியாக திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றி வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலர்கள் சேதமடைந்த மதயானை பட்டி – ஆலங்குளம் சாலையை சீரமைத்து தரவேண்டும். மீண்டும் அந்த அரசு பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.