கன்னட திரை உலகின் இளம் நடிகையாக வலம் வருபவர் சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னட பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். தமிழில் இவர் ஜி.வி.பிரகாஷுடன் வாட்ச்மேன், ஜெயம்ரவியுடன் கோமாளி, மன்மதலீலை, பப்பி ஆகிய படங்களிலும், கன்னடத்தில் கிரிக்பார்ட்டி, காலேஜ் குமார் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். பெங்களூருவில் வசித்து வரக்கூடிய அவர் இப்போது கன்னட இயக்குனர் அபிஷேக்வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் ஒரு சிறிய சண்டை காட்சியில் நடிகை சம்யுக்தா ஹெக்டே பங்கேற்று நடித்தார். அப்போது அவர் கால் தவறி கீழே விழுந்தார். இதனால் பலத்த காயமடைந்த அவரை படக்குழுவினர் மீட்டு பெங்களூருவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிரீம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.